கார்ல்மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் நட்பு, கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு மற்றும் புராணத்தில் வரும் கண்ணன் – குசேலன் நட்பு என்பன போன்ற பல எடுத்துக்காட்டுகள் நட்பிற்கு உதாரணமாய் வந்து விழும்.

ஆனால், வரலாற்றின் நவீன காலத்தில் நம்மிடையே இருந்த ஒரு மகா அதிசய நட்பைப் பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் மற்றும் அந்த நட்பைப் பற்றிய விளம்பரம் எந்த அளவிற்கானது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
அதிசய நண்பர்கள்..!

தந்தைப் பெரியார் – ராஜகோபால ஆச்சாரியார் (இராஜாஜி) ஆகிய இருவருக்கு இடையிலான தனிப்பட்ட நட்புதான் அந்த அதிசய நட்பு!

இந்த இருவரின் நட்பு, வேறு பல நட்புகளை காட்டிலும் தனித்துவமானது. ஏனெனில், கார்ல்மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் நட்பை எடுத்துக்கொண்டால், ஒரேமாதிரியான சிந்தனை கொண்ட இருவருக்கு இடையில் ஏற்பட்ட நட்பாகும் அது.

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் ஆகிய இருவருக்கு இடையிலும், கொள்கை ரீதியாகவோ அல்லது சிந்தனை ரீதியாகவோ குறிப்பிடத்தக்க மாறுபாடு கொண்டவர்கள் இல்லை. கண்ணன் – குசேலன் நட்பும் அத்தகையதே.

இவர்கள் நட்பில் என்ன சிறப்பு?

இங்கேதான், தந்தைப் பெரியார் – இராஜாஜி நட்பு மாறுபட்டு நிற்கிறது. இவர்கள் இருவருமே, தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதி, எதிர் – எதிர் துருவங்களில் நின்று செயல்பட்டவர்கள். அரசியல், சமூக மற்றும் கருத்து தளங்களில் மிகவும் எதிரெதிர் கருத்துக்களைக் கொண்டவர்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் சிறந்த நண்பர்கள்.

இதில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். எதிரெதிர் கொள்கைகளும், அரசியல் நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் எந்தளவு நேருக்குநேர் மோதிக்கொண்டுள்ளனர்? அப்படி மோதிக்கொண்டே, அந்த மோதலானது, தங்களின் தனிப்பட்ட நட்பை பாதிக்காதவாறு தக்கவைத்துக் கொண்டுள்ளார்களா? என்பதுதான் கேள்வியே..!

நட்பு என்றால், வெறுமனே எங்காவது சந்தித்தால், சாதாரணமாக சிரித்துக்கொள்வது அல்லது இரண்டொரு வார்த்தைகள் பேசிக்கொள்வது என்பதல்ல. ஆழமான, அந்தரங்க நட்பு. இந்த நட்புதான், பெரியார் மற்றும் ராஜகோபால ஆச்சாரியார் ஆகியோருக்கிடையே இருந்தது.

இருவரின் சமூக களம் எப்படிப்பட்டது?

பெரியார், தனது நடு வயதுகளில் தொடங்கி, தான் இறக்கும் 95 வயதுவரை, எந்த சமூகத்தின் ஆதிக்கத்தை கடுமையாகவும் தீவிரமாகவும் எதிர்த்து வந்தாரோ, அந்த சமூகத்தை சேர்ந்தவர் இராஜாஜி.

அதேபோல், இராஜாஜி, எந்தப் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிரான கருத்தியலைக் கொண்டிருந்தாரோ, அவர்களின் படிப்பறிவைக் கெடுப்பதற்கான குலக்கல்வி திட்டம் கொண்டுவந்தாரோ, அந்தப் பெரும்பான்மை சமூகத்தில் ஒருவர் தந்தைப் பெரியார்.

தீராத தலைவலி

இராஜாஜியின் அரசியல் செயல்பாடுகளுக்கு(பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இருந்ததால்) தொடர்ந்த தலைவலியாய் திகழ்ந்தவர் பெரியார்! 1930களின் இறுதியில், ஆச்சாரியார் அன்றைய சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தபோது, அவர் கொண்டுவந்த இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து, போராட்ட களம் கண்டவர் பெரியார்.

மேலும், 1954ம் ஆண்டு, இராஜாஜி இரண்டாவது முறை முதல்வராக இருந்தபோது, அவர் கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தை கடுமையாக எதிர்த்து, இராஜாஜி தனது பதவியை விட்டு செல்வதற்கு முக்கிய காரணமாய் இருந்தார் பெரியார்.

காமராஜரை ஆதரித்த பெரியார்

தனக்குப் பதிலாக, தான் விட்டுச்செல்லும் நாற்காலியில், தன் கொள்கைக்கு தோதான சி.சுப்பிரமணியத்தை அமர்த்த முயன்றார் ஆச்சாரியார். ஆனால், அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த காமராஜரை அப்பதவிக்கு தீவிரமாக ஆதரித்து, இராஜாஜியின் திட்டத்திற்கு அப்போதும் தொல்லையாக இருந்தவர் பெரியார்.

மேலும், பல்லாண்டுகளாக, காங்கிரசில் எதிரெதிர் துருவங்களாக இயங்கிவந்த காமராஜர் – இராஜாஜி ஆகியோரின் அரசியலில், காமராஜரை தீவிரமாக ஆதரித்தவர் தந்தைப் பெரியார்.

“ஆச்சாரியார் ஒரு முயலைப் பிடித்து, அதற்கு 4 கால்கள் என்று சொன்னால், அதற்கு நீங்கள் 3 கால்கள் என்று சொல்லுங்கள்” என்று மக்களிடையே முழங்கியவர் பெரியார்.

(காங்கிரசில் நிலவிய பிராமண ஆதிக்கத்தை பெரியார் எதிர்த்து குரல் கொடுத்த காரணத்தாலேயே, கடந்த 1940ம் ஆண்டு நடந்த தமிழக காங்கிரஸ் தலைவர் தேர்தலில், சத்தியமூர்த்தி அய்யர் சார்பாக அவரின் சிஷ்யர் காமராஜரும், இராஜாஜி சார்பாக சி.பி.சுப்பையாவும் நிறுத்தப்பட்டனர் என்பதும், அதில் குறைந்த ஓட்டுகளில் வெற்றிபெற்ற காமராஜர், அதன்பிறகு தான் மரணிக்கும் வரை, தமிழக காங்கிரசில் அசைக்க முடியாத தலைவராக விளங்கினார் என்பதும், தமிழக காங்கிரசில் பிராமணர் அல்லாதோர் ஆதிக்கம் அப்போதிருந்துதான் ஏற்படத் தொடங்கியது என்பதும் அரசியல் குறிப்புகளில் ஒன்று.)

தொடக்க காலம் முதற்கொண்டே…

ஈரோடு நகரசபை சேர்மனாக பெரியாரும், சேலம் நகரசபை சேர்மனாக இராஜாஜியும் ஏறக்குறைய சமகாலத்தில் பதவி வகித்தவர்கள். இராஜாஜியும் வரதராஜுலு நாயுடுவும் சேர்ந்தே, பெரியாரை 1919ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வந்தனர். (காந்தியடிகள் அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு வந்த நேரம் அது.) காங்கிரசில் பெரியாரின் வளர்ச்சிக்கு அனுசரணையாகவே இருக்கிறார் இராஜாஜி.

பெரியார் காங்கிரசில் இருந்த காலத்தில், இடஒதுக்கீட்டுப் பிரச்சினை, தலித் ஆலய நுழைவுப் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினை உள்ளிட்ட பல விஷயங்களில், ஆச்சாரியாரும் பெரியாரும் எதிரெதிர் துருவங்களே. பெரியார் ஒரு கட்டத்தில்(1925) காங்கிரசை விட்டு விலகி, சுயமரியாதை இயக்கம் தொடங்கியதிலிருந்து அந்த எதிர்ப்பு நிலை இன்னும் வேகமெடுக்கிறது.

பெரியார் – மணியம்மை திருமணம்

1940ம் ஆண்டுகளின் இறுதியில், தன் கொள்கையில் அலாதி பற்றுகொண்டு, தனக்கு சிறந்த முறையில் பணிவிடை செய்துவரும் மணியம்மை என்ற 31 வயது பெண்ணை, இயக்கத்தின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, திருமணம் செய்துகொள்ள வேண்டி (மகளாக தத்தெடுக்க அன்றையச் சட்டம் இடம் கொடுக்காத காரணத்தால், மணம் செய்துகொள்ள வேண்டி நேரிட்டது. ஆனால், அந்த திருமணத்தை வேறுசிலர் கொச்சையாக பேசித் திரிவது வேறு விஷயம்), அதுதொடர்பான ஆலோசனையை, தனக்குக் கொள்கைரீதியாக நெருக்கமாக இருக்கும் வேறு யாரிடமும் கேட்காமல், தனது நெருங்கிய நண்பர் இராஜாஜியிடமே கேட்கிறார் பெரியார்.

அதற்கு, “ரகசியம்” என்று குறிப்பிட்டு பதில் கடிதம் எழுதுகிறார் இராஜாஜி. அக்கடிதத்தில், “மணியம்மையுடனான திருமணம், உங்களின் இன்றைய சமூக மதிப்பிற்கு பெருமளவில் சேதம் உண்டாக்கும். எனவே, அத்திருமணத்தை தவிருங்கள்” என்ற பொருள் தரும்படி எழுதுகிறார். ஆனால் பெரியார், மணியம்மையை திருமணம் செய்துகொள்கிறார்.

ஏச்சு-பேச்சுகளுக்கு ஆளான இராஜாஜி

பெரியாரின் தொண்டர்கள் சிலர், தங்கள் தலைவரின் முடிவுக்கு ஆச்சாரியாரே காரணம் என்று அவரை ஏசுகின்றனர். ஆனால், “ரகசியம்” என்று குறிப்பிட்டு எழுதிய கடிதம் என்பதால், உண்மை என்ன? என்பது பற்றி எவ்வளவு ஏச்சு-பேச்சுக்கு ஆளானாலும் இராஜாஜியும் வாய் திறக்கவில்லை (இறுதிவரை கண்ணியம் காத்தார்); தனது நண்பரின் கருத்துக்கு மதிப்பளித்து பெரியாரும் வாய்திறக்கவில்லை.

கொள்கை சமரசமற்றவர்கள்!

தான் மருத்துவமனையில் இருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட பசும் நெய்யை, ஆச்சாரியாருக்கு பிடிக்குமே என்று எண்ணி, வீட்டிற்கு செல்லும்போது, இராஜாஜியை தேடிச்சென்று அதைக் கொடுத்துச் சென்றதுபோல், இவர்கள் இருவரின் நட்பிற்கு பல உதாரணங்கள் உண்டு. ஆனால், கொள்கைக்காகவே வாழ்ந்தவர் பெரியார் என்பதால், ஒரு பிராமணர் தனது நெருங்கிய நண்பர் என்பதற்காக அவரின் செயல்களை ஆதரிக்கவோ அல்லது தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக கண்டும் காணாமலோ இருந்துவிடவில்லை பெரியார். இராஜாஜியும் தன் நெருங்கிய நண்பருக்காக தனது கொள்கைகளை சமரசம் செய்துகொள்ளவில்லை.

கலங்காத பெரியார் கலங்கினார்..!

இராஜாஜி 1972ம் ஆண்டு இறந்தபோது, பெரியார் குலுங்கி குலுங்கி அழுததாய் சொல்வார்கள். தன் முதல் மனைவி நாகம்மையார் 1933ம் ஆண்டு இறந்தபோதுகூட, அப்படி அழாதவர் பெரியார். இராஜாஜி இறந்த அடுத்த ஆண்டிலேயே, அதாவது 1973ம் ஆண்டிலேயே பெரியாரும் இந்த உலகிலிருந்து நீங்கிவிட்டார்.

என்ன ஒரு ஒற்றுமை..!

இவர்கள் இருவரும் ஏறக்குறைய ஒரே வயதுவரை வாழ்ந்தார்கள். ஆச்சாரியார் பிறந்தது 1878ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி. மறைந்தது 1972ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி.

பெரியார் பிறந்தது 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி. மறைந்தது 1973ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி.

பெரியாருக்கு ஒரு ஆண்டு முன்னதாகவே பிறந்து, ஒரு ஆண்டு முன்னதாகவே சென்றுவிட்டார் இராஜாஜி. பெரியார், ஒரு ஆண்டு பின்னதாக பிறந்து, ஒரு ஆண்டு பின்னதாக சென்றார். இருவரும் இறந்தது ஒரே மாதத்தின் அடுத்தடுத்த தேதிகளில்.

இன்னொரு முக்கிய விஷயம், இருவரும் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அன்று அருகருகே இருந்த ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் பிறந்தவர்கள்!

கொள்கைரீதியாக எப்போதும் ஒத்துப்போகாத இவர்கள், தனிப்பட்ட நட்பு என்று வரும்போது துளியும் விட்டுக்கொடுக்காத அதிசய நண்பர்களாகவே இருந்து மறைந்தவர்கள்..!

– மதுரை மாயாண்டி