சென்னை: இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதற்கு பாஜக அரசு முடிவு செய்து விட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:  பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றபிறகு அவற்றில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தத் தேவையில்லை என்று பாஜக அரசு முதலீட்டாளர்களிடம் கூறியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதற்கு பாஜக அரசு முடிவு செய்து விட்டதையே இது காட்டுகிறது.

சமூக நீதிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரான பாஜகவின் இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை உடனடியாகத் திரும்பப்பெறுமாறு வலியுறுத்துகிறோம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதில் பாஜக அரசு மும்முரமாக உள்ளது இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்கப் போவதாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது.

இப்படி தனியாருக்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றபிறகு அந்த நிறுவனங்களில்  இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை, எனவே நீங்கள் தாராளமாக முதலீடு செய்யுங்கள் என்று தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பங்குதாரர்கள் ஒப்பந்தம் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்படும்போது ஏற்கனவே அங்கு வேலையில் இருப்பவர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்தால் போதும், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என்று கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சொல்லப்பட்டிருப்பதாக முதலீடு மற்றும் பொதுவள மேலாண்மைத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது என அந்த செய்தி தெரிவிக்கிறது.

பொதுமக்களின் வரிப்பணத்தைக்கொண்டு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனது கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு தாரை வார்த்துக்கொண்டிருக்கும் மோடி அரசு இப்போது இட ஒதுக்கீட்டை முற்றாக அழித்தொழிக்க முடிவுசெய்திருப்பது அப்பட்டமான சனாதன நடவடிக்கையே ஆகும்.

இட ஒதுக்கீடு என்பது ஆட்சியாளர்கள் வழங்கும் சலுகை அல்ல, அது அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட உரிமை ஆகும். அதைப் பறிப்பதற்கு முடிவெடுத்துள்ள பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் இந்தத் தேர்தலில் சரியான பாடத்தைத் தமிழக மக்கள் புகட்டவேண்டும். இட ஒதுக்கீடு என்னும் சமூகநீதியைக் காக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன் வரவேண்டும் என அறைகூவி அழைக்கிறோம் என்று கூறியுள்ளார்.