திருமலை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவாரபுஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடந்துள்ளது.

ஆண்டு தோறும் திருமலையில் ஆனிவார அஸ்தானத்தன்று புஷ்ப பல்லக்கு சேவை நடப்பது வழக்கமாகும்.   இது ஏழுமலையான் சன்னிதியில் கணக்கு சமர்ப்பிக்கும் திருநாள் ஆகும்.    இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தலால் இந்த விழா கொரோனா விதிமுறைகளுக்குட்பட்டு நடந்தது.

இதையொட்டி ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 6 பட்டு வஸ்திரங்களைத் திருமலை பெரிய ஜீயா் வெள்ளி தாம்பாளத்தில் தலை மேல் வைத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து சின்ன ஜீயா், செயல் அதிகாரி உள்ளிட்டோரிடம் சமர்ப்பித்தார். அவற்றை 4 ஏழுமலையான் மூலவர் சிலைக்கும், உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமிக்கும், சேனாதிபதி விஷ்வக் சேனருக்கும் சமர்ப்பிக்கப்பட்டன.

அதன் பின்னர் தலைமை அர்ச்சகர்கள் பரிவட்டம் கட்டிக் கொண்டு ஏழுமலையானை ‘நித்திய ஐஸ்வா்யோ பவ’ என்று ஆசீர்வதித்தனர்.  பிறகு ஜீயா்கள், செயல் அதிகாரி என அனைவரின் கைக்கும் கருவூல சாவி கொத்தை மாட்டி அவர்களுக்குச் சந்தனம், சடாரி, மலர்கள், துளசி பிரசாதங்கள் அளித்து, சாவி ஏழுமலையான் பாதத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. இத்துடன் ஆனிவார ஆஸ்தானம் நிறைவு பெற்றது.

மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி தென்னை ஓலைகள், நார்கள் மற்றும் வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்ட பல்லக்கில் மாடவீதியில் பவனி வந்தார். இதற்காக 3 டன் மலர்கள் பயன்படுத்தப்பட்டன.  சிறப்புப் புஷ்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பல்லக்கு அலங்கரிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மாடவீதியில் புஷ்ப பல்லக்கு பவனி ரத்து செய்யப்பட்டது.  தற்போது தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தேவஸ்தானம் மாடவீதியில் புஷ்ப பல்லக்கு சேவையை நடத்தியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புஷ்ப பல்லக்கு சேவை தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நமது வாசகர்களுக்காகப் புஷ்ப பல்லக்கு உலா வீடியோ இதோ: