சுவாதி கொலை வழக்கில், தன் மீது அவதூறு பரப்புவதாக திலீபன் மகேந்திரன் என்பவர் மீது பா.ஜ.க. பிரமுகர் கருப்பு முருகானந்தம் கொடுத்த புகாரை அடுத்து, திலீபன் மகேந்திரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி என்ற இளம்பெண்ணின் கொலை வழக்கில் ராம்குமார் என்ற நெல்லை இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஆனால், “ராம்குமார் கொலை செய்யவில்லை. இஸ்லாமிய இளைஞர் ஒருவரை சுவாதி காதலித்தார். மதம் மாறி திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்திருந்தார். இதையறிந்த சுவாதி குடும்பத்தினர்தான் இந்துத்துவா ஆட்கள் மூலம் சுவாதியை கொலை செய்தனர். அந்த இந்துத்துவ கொலைப்படைக்கு பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம்தான் தலைமையேற்றிருந்தார்” என்பதாக திலீபன் மகேந்திரன் என்பவர் முகநூலில் எழுதி வந்தார். கடந்த குடியரசு தினத்தின்போது, தேசிய கொடியை எரித்து அதை ஒளிப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றி பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர். அது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தன் மீது அவதூறு பரப்புகிறார் என்று திலீபன் மகேந்திரன் மீது திருவாரூர் டவுன் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு கருப்பு முருகானந்தம் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் இன்று மாலை திலீபன் மகேந்திரன் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவி இருக்கிறது.

சுவாதி கொலை வழக்கில் தன்னை பொய்யாக இணைத்து வதந்தி பரப்புவதாக முகநூலில் இயங்கும் தமிழச்சி என்பவர் மீது, திருவாரூர் எஸ்.பி.யிடம் கருப்பு முருகானந்தம் புகார் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel