சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பெற்றோரை இழந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிட்டது. இதுதொடர்பாக கடந்த மே மாதம 29ந்தேதி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  தற்போது  அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

ஒவ்வொரு மாவட்டத்திலும்  மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலான சிறப்பு பணிக்குழுவுடன்,  மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்களும் கொரோனாவால்  பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தொடர்பாக கணக்கீடு செய்ய வேண்டும்.

சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தரவுகளை பெற்று கணக்கீடு செய்ய வேண்டும் ,

பெற்றோர்களை இழந்த குழந்தைகளை, மாவட்ட வாரியாக உள்ள குழந்தைகள் நல ஆணையத்தின் முன்பு கட்டாயமாக ஆஜர் படுத்த வேண்டும்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கும் பட்சத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அதே பள்ளியில் படிக்க வழிவகை செய்யப்படுவதோடு, பிரதம மந்திரி நிதி உதவி அல்லது மாநில அரசின் நிதியில் இருந்து கட்டணம் செலுத்தப்படும் எனவும் சீறுடை, புத்தகமும் இந்த நிதியில் இருந்தே வழங்கப்படும்.

குழந்தையின் பெற்றோர் அரசு ஊழியர்களாகவோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களாகவோ இருக்கும் பட்சத்தில் அரசின் எந்த சலுகையும் கிடைக்காது

இந்த பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட குழந்தை நல அலுவலர், தலைமை கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் கொண்ட 6 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.

இவ்வாறு தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.