புதுடெல்லி:
தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில், 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.இதுவரை, நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு, நாளை நடக்கிறது. இதற்கிடையே, தீவிர தேர்தல் பிரசாரங்களில், அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசார பேரணிகள் நடந்து வருவதால், வைரஸ் பரவல் வேகமெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, வைரஸ் பரவலை கருத்தில் வைத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவை, ஒரே நேரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகின.

இந்த வதந்திகளுக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘மேற்கு வங்கத்தில் எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான தேர்தலை சேர்த்து, ஒரே நேரத்தில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.