புதுடெல்லி:
100 கோடி தடுப்பூசிகளைச் செலுத்திய பின் இந்தியா புதிய சக்தியைப் பெற்றுள்ளதாகவும், தடுப்பூசித் திட்டத்தில் பெற்ற வெற்றி, நாட்டின் வல்லமையைப் பறைசாற்றுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாகப் பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, அக்டோபர் மாதம் முழுவதும் பண்டிகைகளால் அலங்கரிக்கப்படும் என்பதால், மக்கள் அனைவரும் உள்நாட்டுப் பொருட்களை வாங்கக் குரல் கொடுக்க வேண்டும் எனவும், பண்டிகைகளைப் போல, ஏழை கைவினைக் கலைஞர், நெசவாளிகளின் வாழ்வையும் ஒளிரச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

“ட்ரோன்” தொழில்நுட்பம் கிராமங்களின் நிலப்பரப்பை மின்னிலக்க முறையில் பதிவு செய்யும் பணிகளில் பயன்படுவதாகவும், இதன் மூலம் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரிடர் காலங்களில் உதவிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ட்ரோன் தொழில் நுட்பத்தை, சரக்குப் போக்குவரத்தில் பயன்படுத்துவது தொடர்பான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க, ட்ரோன் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தும் காலம், வெகு தொலைவில் இல்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.