டெல்லி:

ஆர்.எஸ்.எஸ். பிரதமர் பாரத் மாதாவிடம் பொய் கூறுகிறார் என்று காங்கிரஸ் எம்.பி.  ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் எந்த பகுதியிலும் தடுப்பு காவல் மையம் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி, பாரத் மாதாவிடம் பொய் சொல்லி இருக்கிறார் என்றுராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகளும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த போராட்டத்தை காங்கிரஸ் தூண்டி விடுகிறது என்று பிரதமர் உள்பட பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று உ.ப.யில் வாஜ்பாய் சிலை திறப்பு  நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக,  காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் நகர்ப்புற நக்சலைட்டுகளுடன் இணைந்து முஸ்லிம்கள் தடுப்பு காவல் மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்று வதந்தியை பரப்புகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி,  “நாட்டின் எந்த பகுதியிலும் தடுப்பு காவல் மையம் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். பிரதமர் பாரத்மாதாவிடம் பொய் சொல்லி இருக்கிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தில் தடுப்பு காவல் மையத்துக்கான கட்டிடங்கள் கட்டும் வீடியோ கிளிப்பையும் ராகுல் காந்தி அந்த பக்கத்தில் இணைத்துள்ளார், மேலும் மோடி பேசும் வீடியோவையும் அவர் இணைத்து உள்ளார்.