லக்னோ: இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருக்க வேண்டிய நபர், குழப்பத்தையும், சீர்குலைவையும் ஏற்படுத்தி வருகிறார் என்று நரேந்திரமோடியை பெயர் குறிப்பிடாமல் தாக்கியுள்ளார் சமாஜ்வாடி கட்சித் தலைவர்களுள் ஒருவரான ஜெயா பச்சன்.

லக்னோ தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டிருக்கும் பூனம் சின்ஹாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அவர், இதை தெரிவித்தார். மேலும், வாக்குச்சாவடி முகவர்களின் பணியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் அவசியமானதும்கூட என்றுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய வேட்பாளரை நாங்கள் மனமார வரவேற்கிறோம். சமாஜ்வாடி கட்சியைப் பொறுத்தவரை புதியவர், பழையவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அனைவரும் கட்சியின் உறுப்புகள்தான்.

பூனம் சின்ஹாவின் வெற்றியை லக்னோ மக்களாகிய நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் மும்பைக்குள் என்னை நுழையவிட மாட்டார். கடந்த 40 ஆண்டுகளாக அவர் எனக்கு நண்பர்.

நடைபெறவுள்ள தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் தவறாமல், பெருந்திரளாக வந்து வாக்களிக்க வேண்டும். தற்போது நீங்கள் காட்டும் உற்சாகத்தையும் எழுச்சியையும், வாக்குப்பதிவு நாளன்றும் காட்டுவது முக்கியம்” என்றார்.