“அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விதம் இந்தியாவிற்கும் இந்தியாவின் கண்ணியத்திற்கும் அவமானம்” என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் இன்று (வியாழக்கிழமை) கூறினார்.

சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை திருப்பி அனுப்பும் செயல்முறையின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, 104 இந்தியர்கள் அமெரிக்க இராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனால் அவர்கள் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டனர். விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கிய பின்னரே சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டதாக புலம்பெயர்ந்தோர் குற்றம் சாட்டினர்.

இதற்கு பதிலளித்த தரூர், ‘இந்திய அரசு அமெரிக்காவிற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்.’ என்றார். “அமெரிக்கா நம்மை அவமானப்படுத்தும் விதத்தில் நடத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை” என்று அவர் கூறினார்.

“அமெரிக்கா நடந்து கொண்ட விதத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.” தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை நாடு கடத்த அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. அவர்கள் இந்தியர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களை ஏற்பது நமது கடமை.

ஆனால் அவர்களை ராணுவ விமானத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பி இருப்பது, உண்மையிலேயே இந்தியாவை அவமதிப்பதாகும். இது இந்தியாவின் கௌரவத்திற்கு களங்கம் விளைவித்துள்ளது. “இதை எதிர்க்க வேண்டும்,” என்று அவர் கோரினார்.

‘நீங்கள் அவர்களை ஒரு சிவிலியன் விமானத்தில் அனுப்பலாம்.’ அவர்கள் நமது குடிமக்களாக இருந்தால், நாங்கள் அவர்களை ஏற்றுக்கொள்வோம். ஆனால் இந்த மாதிரியான செயல் சரியல்ல. “பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“அமெரிக்காவின் இந்த மிருகத்தனமான நடத்தையை இந்தியா கண்டிக்க வேண்டும், மேலும் விளக்கம் கோர வேண்டும்” என்றும் சசி தரூர் கூறினார்.

[youtube-feed feed=1]