டில்லி:

சுனந்தா புஷ்கரின் மனைவி மரணம் தொடர்பான செய்திகளில் சசி தரூரின் கருத்தை கேட்க வேண்டும் என்று ரிபப்ளிக் தொலைக்காட்சி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு டில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எம்பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், தெற்கு டில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் 2014ஆம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக இன்னமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த மரணம் தொடர்பாக ‘ரிபப்ளிக்’ தொலைக்காட்சி ஒளிபரப்பிய விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை குற்றம் சாட்டி கருத்துக்கள் இடம்பெற்றன. எனவே தனது மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பாக, தவறான செய்திகளை ஒளிபரப்பு செய்வதற்கு ‘ரிபப்ளிக்’ தொலைக்காட்சிக்குத் தடை விதிக்கக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதன் மீது நடந்த விசாரணையின் போது நீதிபதி கூறுகையில், ‘‘சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பும் உரிமையை ‘ரிபப்ளிக்’ தொலைக்காட்சியிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது. ஆனால் அதில் ஒரு சமநிலை வேண்டும். இனி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பும் முன்னர் சசி தரூரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அவருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் அமைதி காக்க உரிமை உண்டு. ஒரு விஷயத்தில் கருத்து தெரிவிக்குமாறு அவரை யாரும் கட்டாயப்படுத்தவோ அல்லது வற்புறுத்தவோ முடியாது. எனவே சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான செய்திகளில் சசி தரூரின் மவுனத்திற்கு ‘ரிபப்ளிக்’ தொலைக்காட்சி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி மரியாதை கொடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.