சென்னை: தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ரூ.10 லட்சத்துடன்  ‘தகைசால்_தமிழர்’ விருது உருவாக்கப்படும் என  முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான்,“#தகைசால்_தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான். “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க  தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மேற்படி விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் ஆணையிட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் “தகைசால் தமிழர்” விருது பெறும் விருதாளருக்கு பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திர தின விழாவின்போது, முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.