சென்னை: நடிகர் ரஜினகாந்தின் வாழ்நாள் திரைத்துறை சாதனைக்காக தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியினர், திரையுலகினர்  வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்ட 67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் துணைகுடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவால் வழங்கப்பட்டது. இதில்,  45 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருதை குடியரசு   துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி கவுரவித்தார்.

ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது! துணைகுடியரசுத்தலைவர் வெங்கையா வழங்கினார்

இந்த நிலையில் விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,  தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்கள் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாள், திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதொரு பொன்னாளாகும். இந்தியத் திரையுலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் தங்களில் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர் நீங்கள். நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள் பல நீடுடி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்,  “திரைத்துறையின் உயரிய விருதான #DadasahebPhalkeAward பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள். திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பல அரசியல் கட்சித்தலைவர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாலசந்தருக்கு காணிக்கை: என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களான தெய்வங்களுக்கு நன்றி! தாதா பெற்ற ரஜினிகாந்த நெகிழ்ச்சி உரை…