தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழலை கருத்தில் கொண்டு தமிழக பாஜகவுக்கு  தலைமை ஏற்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்திற்கு பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

பாஜக உறுப்பினரான அமர் பிரசாத் ரெட்டி என்பவர் நடிகர் ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 5ம் தேதி எழுதப்பட்ட ஒரு கடிதம் தற்போது வெளியாகி இருக்கிறது.

அந்த கடிதத்தில் , “முதல்வராக  இருந்த ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து மக்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால்  ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், இந்தியாவை வல்லரசாக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்கை நிறைவேற்றவும் ரஜினி, பாஜகவில் இணைய வேண்டும். தங்களது வெளிப்படையான நிர்வாகம் மற்றும் தலைமை பண்புகள் காரணமாக தமிழகம் முதல் மாநிலமாக திகழும்.

கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என நீங்கள் பலமுறை சொல்லியுள்ளீர்கள். உங்களது விருப்பத்தை பகவத் கீதையின் இந்த வார்த்தைகள் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டன.

“யதா யதா ஹி தர்மஸ்ய த்லாநீர்பவதி பாரத அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்
பரித்ராணாய ஸாதுநாம் விநாஷாய ச்ச துஷ்க்ருதாம் தர்மஸ்ம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே”

தமிழகத்தை காக்கவும், தமிழக மக்களை காக்கவும் எனது இந்த வார்த்தைகளை கவனத்தில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினி, அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழக மற்றும் அகில இந்திய பாஜக தலைவர்கள் பலமுறை அழைப்பு விடுத்துள்ளனர் அதற்கு ரஜினி பதில் ஏதும் சொல்லவில்லை.

இந்த நிலையில்,”பாஜகவுக்கு தலைமை ஏற்க வாருங்கள்” என்று கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் சொல்லாமல், வெறும் உறுப்பினராக இருக்கும் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். இதையடுத்து, இந்தக் கடிதம் மூலம் ரஜினியின் மனநிலையை அறிந்துகொள்ள பாஜக நூல்விட்டுப் பார்க்கிறதோ என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.