சென்னை

மிழகத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவன பெயர்ப் பலகைகளிலும் தமிழுக்கு   முதல்  இடம் அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முழக்கமிடும் தமிழகத்திலுள்ள பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் நிறுவன பெயர்ப் பலகைகளைத் தமிழில் வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே வைத்துள்ளன.  அண்டை மாநிலமான கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெயர் பலகைகள் அனைத்தும் அந்த மாநில மொழியிலேயே வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 1987 ஆம் வருட தமிழக அரசின் அரசாணைப்படி ”ஆட்சி மொழியான தமிழ்மொழியை, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களில் முதல் மொழியாக பயன்படுத்த வேண்டும் எனவும். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளைப் பயன்படுத்துவதாக இருந்தால் தமிழ் மொழியின் கீழ் 5:3:2 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும் எனவும் உள்ளது

தற்போது தமிழக தொழிலாளர் ஆணையம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது   அத்துடன் இந்த அரசாணை பின்பற்றப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது,

பெயர்ப் பலகையில்  மற்ற மொழிகளை பயன்படுத்த விரும்பினால்  கடைகள், நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும், எனவும் ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும் , மற்ற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும் என்றும் தற்போது அந்த அரசாணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.