ராமநாதபுரம்:  நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு தமிழக மீனவர்கள் 19 பேரை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. தமிழக மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் கைப்பற்றி இலங்கைக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளை அவ்வப்போது தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு கைது மற்றும் தொல்லைகளுக்கு ஆளாகும் மீனவர்களை, எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சம்பங்களை தடுத்து நிறுத்துமாறு, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை அளித்த போதிலும், இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், வழக்கம்போல நேற்று  ராமேஷ்வரம் பகுதியில் இருந்து  500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில்  இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்,  எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர். மேலும், மீனவர்கள் படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, பேட்டரி செல்போன் மற்றும் 20 லிட்டர் டீசல் உள்ளிட்ட பொருட்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு படகு மற்றும் 6 மீனவர்களையும் சிறைபிடித்தனர். மொத்தம் 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் பெயர் மற்றும் கூடுதல் விவரங்கள் இலங்கை கடற்படை விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள் பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு மீனவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.