திருவனந்தபுரம்:
’கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என கேரள அரசு எச்சரித்துள்ளது.

அண்மையில், மத்திய அரசு, ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவது, பாடல் கேட்பது போன்ற சக பயணிகளை தொந்தரவு செய்யும் செயல்களுக்கு தடை விதித்திருந்தது.

கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு, கேரளாவில் அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாகப் பேசுவது, அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, பாடல்கள் அல்லது காணொலிகளைச் சத்தமாகப் பார்ப்பது, போன்ற செயல்களால், பிற பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்தன.

இந்நிலையில் நேற்று கேரள அரசு போக்குவரத்து கழகம், அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, ”இனி கேரளாவில், அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவரை பற்றிய தகவல் தெரிவிக்க வசதியாக, இந்த அறிவிப்பினை அனைத்து பேருந்துகளின் தகவல் பலகையில் இடம்பெறச் செய்ய வேண்டும்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.