தாஜ்மகால் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே தரப்படும், தினமும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை: செப்டம்பர் 21-ம் தேதி ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் பார்வையாளர்களுக்காக திறந்து விடப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் போக்கு வரத்து, சுற்றுலாத்தலங்கள், பொழுதுபோக்கு பகுதிகள், கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டது.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. இதுவரை 5 கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி செப்டம்பர் 1ந்தேதி முதல் 90 சதவிகிதம் அளவிலான தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, பொதுப்போக்குவரத்து, சுற்றுலாத்தலம் உள்பட பலவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, மூடப்பட்ட தாஜ்மகால், 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கும் தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
வரும் செப்டம்ர் 21-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.