சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று முற்பகல் உபரி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நாளை வரை வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால்,  சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் இருப்பை கண்காணிக்கும் பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  புழல், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  மேலும் ஏரி பகுதிகளிலும் நல்ல மழை பெய்கிறது.  இதனால், புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கன அடியாக உயர்ந்துள்ளது. சோழவரம் ஏரிக்கான நீர்வரத்து 174 கனஅடியில் இருந்து 231 கனஅடியாக அதிகரித்துள்ளது.  அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 24 அடி உயரம் உள்ள ஏரியில் 22.29 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.  இதன் காரணமாக, ஏரியின் பாதுகாப்பு கருதி,  இன்று காலை 10.30 மணிக்கு, 200 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளது.