கல்யாண வரம் தரும் கரபுரநாதர்!
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது உத்தமசோழபுரம். இந்த ஊரில் எழில்மிகு கரபுரநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது.
சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்னர் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர், கரபுரநாதர். லிங்க வடிவில் உள்ள கரபுரநாதரின் தலை சற்று சாய்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதற்குக் காரணமான திருக்கதை ஒன்று உண்டு.
கரபுரநாதருக்கு அர்ச்சனை செய்துவந்தார் ஓர் அர்ச்சகர். ஒருநாள் அவர் நோயுற்ற காரணத்தால், அவரால் கோயிலுக்கு வர முடியவில்லை. ஆனாலும், இறைவனுக்கு வழக்கமான அர்ச்சனையைச் செய்ய வேண்டுமே! அதனால், தன் மகன் குணசீலன் என்ற சிறுவனைக் கோயிலுக்கு அனுப்பினார்.  குணசீலனும் கோயிலுக்கு வந்தான். ஈசனுக்குச் செய்யவேண்டிய கைங்கர்யங்கள் அனைத்தையும் செய்தான். அர்ச்சனையையும் செய்து முடித்தான். பிறகு, கரபுரநாதருக்கு மாலை அணிவிக்க முற்பட்டான். ஆனால், உயரம் போதாத காரணத்தால், லிங்கத்தின் தலை அவனுக்கு எட்டவில்லை. பதறிப்போனான்.
`இறைவா! உனக்கு அனைத்துச் சேவைகளையும் செய்தேனே… இந்த மாலையை என்னால் அணிவிக்கமுடியாமல் போய்விடுமோ… கருணை காட்ட மாட்டாயா?’ என மனமார கண்ணீர்மல்க இறைவனை வேண்டினான். எம்பெருமான் கருணைக்கடல் அல்லவா? சிறுவன் குரலுக்கு மனம் இரங்கினார். லேசாகத் தலையைச் சாய்த்தார். குணசீலன், ஈசனுக்கு மாலையை அணிவித்தான். இந்தக் காரணத்தால் ‘முடி சாய்ந்த மன்னர்’ என்ற திருநாமம் கரபுரநாதருக்கு உண்டானது.
இந்தத் தலத்தின் பெருமைகளை உணர்ந்த அன்றைய சோழ மன்னர்கள், இங்கு வந்து வழிபட்டிருக்கிறார்கள்; திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இதனால் இறைவனாரை ‘சோழேஸ்வரர்’ என்றும் திருநாமம் சூட்டி அழைக்கின்றனர் பக்தர்கள்.
சோழர்கள் மட்டுமல்ல சேர பாண்டியர்களும் இந்த ஈசனை வழிபட்டுள்ளனர். அவர்கள் மட்டுமா? ஔவை, அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோரும் இங்கு வந்து வழிபட்டு, பதிகங்கள் பாடியிருக் கிறார்கள். இதன் காரணமாகவே, இங்கு ராஜ கோபுரத்தை அடுத்துள்ள நுழைவாயிலின் மேற்புறத்தில் மூவேந்தர்களின் சிலைகளும் ஔவை, அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோரது சிலைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலும், முன் மண்டபத்தில் உள்ள கல்தூண் மற்றும் சுவர்களில் மூவேந்தர்களின் கொடிச்சின்னங் களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலின் பழைமையை இங்கு உள்ள பழங்காலக் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.
ராஜகோபுரத்தின் முன்பாக நின்ற நிலையில் ஔவை பிராட்டியார் காட்சி தருகிறார். இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்கள் ஔவை பிராட்டியை மனம் உருகி வணங்கிச் செல்கின்றனர். பாரி மன்னரின் மகள்கள் அங்கவை, சங்கவை. தந்தை மற்றும் தாயை இழந்த இந்த இருவரையும் ஔவையார் இங்கு அழைத்து வந்து, மூவேந்தர் களின் முன்னிலையில் திருக்கோவிலூர் மன்னருக்குத் திருமணம் செய்துவைத்தாராம். இதன் பொருட்டு, மூவேந்தர்களும் பகை மறந்து ஒன்றுகூடிய தலம் இது எனவும் கூறப்படுகிறது.
மூவேந்தர்களும் இங்கு வந்து இருந்தபோது சோழ மன்னர் உத்தமசோழபுரம் என்ற இடத்தி லும், சேர மன்னர் சேலம் என்ற இடத்திலும், பாண்டிய மன்னர் வீரபாண்டி என்ற இடத்திலும் தங்கி இருந்ததாகக் கூறுகின்றனர் பக்தர்கள். இந்தக் கோயிலில் கால பைரவர் சந்நிதி, கரடி சித்தர் சந்நிதி, ஐயப்பன் சந்நிதி ஆகியவையும் உள்ளன. இந்தக் கோயில் அமைந்துள்ள ஊருக்கு `கைகொடுக்கும் ஊர்’, `பெரியூர்’, `உத்தமசோழபுரம்’ என மூன்று திருப்பெயர்கள் உள்ளன.
திருமணத் தடையால் வருந்தும் ஆண்களும் பெண்களும் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்வாமிக்கும்
அம்பாளுக்கும் நெய் தீபமேற்றி திருமண வரம் வேண்டி வழிபட்டுச் சென்றால், தடைகளும் தோஷங்களும் நீங்கி விரைவில் கல்யாண பாக் கியம் கைகூடும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
வாழ்வில் ஒருமுறையேனும் கரபுரநாதரை வழிபட்டு வருவோம். சிறுவனுக்காக சிரம் சாய்த்த அந்த ஈசன், நமது பிரார்த்தனைகளுக்கும் செவி சாய்த்து அருள்பாலிப்பார்!
எப்படிச் செல்வது?:
சேலம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து, அரியானூர் மார்க்கத் தில் செல்லும் பேருந்தில் ஏறி, `பூலாவரி பாலம்’ பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லலாம். சேலம் புதிய பேருந்து நிலையத் தில் இருந்து, கோவை செல்லும் நகரப் பேருந்துகளில் ஏறி, கொண்டலாம்பட்டி பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஆட்டோவில் பயணித்து கோயிலை அடையலாம்.