டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியல் சாசனம் அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்று தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர்  மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரின் அதிகாரம் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன்,  ‘மாநில அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப் பட்டவர்,’ என தெரிவித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 11ம் தேதி உத்தரவிட்டது. மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யும்படியும் தெரிவித்தது.

அதன்படி, தமிழக அரசு  தனது எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், தமிழக அமைச்சரவை எடுத்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தினார். தற்போது அவரது அதிகாரம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டதும், அவர் அதை குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.  பேரறிவாளன் விடுதலை தொடர்பான  தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப அவருக்கு அதிகாரம் இல்லை. மேலும், 432 (7) சிஆர்பிசி சட்டத்தின் அடிப்படையில் யாருக்கு அதிகாரம் என்பது பிரித்து வரையறுக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் தமிழக விசாரணை எல்லையில் வழக்கு உள்ளதால், முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது. மேலும், சி.ஆர்.பி.சி அல்லது ஐ.பி.சி ஆகியவை அரசியலமைப்பு  பிரிவு 72 மற்றும் 161ன் கீழ்வுள்ள தனிப்பட்ட சட்டமானது ஜனாதிபதி, ஆளுநரின் அதிகாரத்தை பாதிக்காது என்று உச்சநீதிமன்றத்தால் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு, அந்த விவகாரம் முடித்தும் வைக்கப்பட்டு விட்டது. எனவே, ஆளுநரின் சிறப்பு அதிகாரமான 161ன் கீழ் முடிவெடுக்க எந்த தடையும் இல்லை.

மேலும், ஐ.பி.சி 302 போன்ற பொதுப் பட்டியலில் உள்ள விவகாரங்களில் பொது மன்னிப்பு, தண்டனை குறைப்பு தொடர்பாக ஜனாதிபதி மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று ஒன்றிய அரசு வாதிட்டது.  அந்த வாதத்தை ஏற்றால் கடந்த 72 ஆண்டுகளாக ஆளுநர் தனது சிறப்பு அதிகாரமான 161 சட்டத்தை பயன்படுத்தி வழங்கிய தண்டனை குறைப்பு உள்ளிட்ட அனைத்தும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று ஆகிவிடும்.  அதனால், ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரித்து விட்டு, ஏற்கனவே நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளின் அடிப்படையில் பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்வது, மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாகும். அதனால், இதனை ஏற்றுக் கொண்டு இந்த வழக்கில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை  செய்து  இன்று காலை உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தின் 142வது அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசியல் சாசனம் அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 30 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.