டில்லி,

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள  அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசும், காஷ்மீர் மாநில அரசும் பதிலளிக்குமாறு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் அரசியல் சாசனப் பிரிவு 370 குறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்ட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் சாசனப் பிரிவு 370 அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்த வழக்கில், 370வது  சட்டப் பிரிவை நீக்க முடியாது என்று டில்லி உயர்நீதி மன்றம் அறிவித்து விட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், மற்றும் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், டி.ஒய்.சந்திர சூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசும், காஷ்மீர் மாநில அரசும் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.