டெல்லி: ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

2018ம் ஆண்டு கட்டிடி வடிவமைப்பாளர் அன்வய் நாயக் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 4ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்னாப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

பின்னர் தலேஜா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். ஆனால் தமக்கு ஜாமீன் தருமாறு மும்பை உயர்நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாமீனுக்கு மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து அர்னாப் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, 50 ஆயிரம் பிணை தொகை செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அர்னாப் உள்ளிட்ட 3 பேருக்கும் ஜாமீன் அளித்தது. எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அர்னாப்வை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது.