சண்டிகர்: சாலை விபத்து வழக்கில், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. இந்த நிலையில், தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக, சரணடைய அவகாசம்  வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் சித்து சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சித்துவின் கோரிக்கையை உச்சநீதி மன்றம்  நிராகரித்துள்ளது.

பஞ்சாப்பின் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே ஜீப்பை சாலையில் நிறுத்தியதாக கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில்,  சித்து, குர்னாம் சிங் என்ற நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்ட நபர் பின்னர் இறந்துவிட்டார். இதனால் சித்து மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, 1999ம் ஆண்டு பாட்டியாலா விசாரணை நீதிமன்றம்  சித்துவை விடுதலை செய்து உத்தரவிட்டது. ஆனால், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  சித்து குற்றவாளி 2006ம் ஆண்டு உத்தரவிட்டது. அத்துடன், சித்துவுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சித்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்துவந்த உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்ததுடன், உடனே  நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிடப்பட்டது.  34 வருடங்களுக்கு பிறகு சித்து குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சித்து தனது  உடல் நலப் பாதிப்புகளை கூறி  சரணடைய சில வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதன் காரணமாக உடனே சரணடைய வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.