டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய்க்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்படுவதாக உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள்தலைமை நீதிபதியும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன்கோகாய்க்கு எதிராக கடந்த 2019ம் ஆண்டு,  உச்சநீதிமன்ற பெண் பணியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறினார்.  கடந்த  2018ம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்த அத்துமீறல்  நடந்ததாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் உள்ள  22 நீதிபதிகளுக்கும், அந்தப் பெண் பிரமாணப் பத்திரம் அனுப்பினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புகார் தொடர்பாக ஏ, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வில்  விசாரிக்கப்பட்டது.  இதற்கிடையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் சிங் ஜெயின் என்பவர்  தன்னை ஒருவர் சந்தித்து பேசியதாகவும், அப்போது,  தலைமை நீதிபதிக்கு எதிராக போலியாக பாலியல் புகாரைப் பதிவு செய்ய உதவ வேண்டும் என்றும், அதற்காக ரூ.1.50 கோடி பேரம் பேசியதாகவும், இதில் சதி நடக்கிறது என்றும்  கூறினார்.

இதுகுறித்து நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பாலி நாரிமன், தீபக் குப்தா ஆகிய சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது.  பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, தற்போது, ரஞ்சன்கோகாய் மீதான  பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டு உள்ளது.

இந்த வழக்கில், ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படும் என கூறி  இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன, இதுவரை,  மின்னணு சான்றுகள் மீட்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை. சி.ஜே.ஐ எஸ்.ஏ.போப்டே தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு ஏற்கனவே ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து முன்னாள் தலைமை நீதிபதி முதான  வழக்கு மூடப்பட்டு நடவடிக்கைகள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.