சண்டிகார்:

பாலிவுட் நடிகர் சன்னிதியோல் உட்பட சிலரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளதற்கு, பஞ்சாப் மற்றும் சண்டிகார் பாஜகவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மொத்தமுள்ள 13 மக்களவை தொகுதிகளில் 3 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தவுடனேயே குருதாஸ்பூர் மக்களவை தொகுதி வேட்பாளராக சன்னி தியோலை பாஜக அறிவித்தது.

மறைந்த நடிகர் ராஜேஸ் கண்ணாவின் மனைவி கவிதா இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். அங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜக மீது தனது அதிருப்தியை  வெளியிட்டார்.

வெளியிலிருந்து ஆட்களை கொண்டு வந்து, சொந்த கட்சிக் காரர்களை வஞ்சிப்பது பாஜகவின் வாடிக்கையாக இருக்கிறது.
எனது கணவர் ராஜேஸ் கண்ணா குருதாஸ்பூர் தொகுதியில் 4 முறை போட்டியிட்டு வென்றார். இந்த தொகுதியில் அவர் பிரபல்யமானவர்.
எம்பியாக இருக்கும்போதுதான் அவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்தார். இடைத் தேர்தலில் எனக்கு சீட மறுக்கப்பட்டது.
உள்ளூர் தொழிலதிபர் ஸ்வரன் சலாரியாவுக்கு சீட் கொடுத்தனர். அவர் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கரிடம் தோல்வியடைந்தார்.
அந்த இடைத் தேர்தலிலும் எனக்கு சீட் தருவதாகக் கூறி கடைசி நேரத்தில் ஏமாற்றினர். இப்போதும் ஏமாற்றிவிட்டனர் என்று கொதித்தார் கவிதா.

அதேபோல், ஹோஷியார்பூர் எம்பி. விஜய் சாம்ப்லாவும் தனக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு கடும் கோபம் அடைந்துள்ளார்.
பாக்வாரா எம்எல்ஏ சாம் பர்காஷை வேட்பாளராக பாஜக அறிவித்ததால் கடும் அதிருப்தியடைந்துள்ளார்.

மாட்டை அறுப்பதுபோல், என்னை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன். இதுவரை என் மீது ஊழல் குற்றச்சாட்டு ஏதும் இல்லை. விமான நிலையம், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தை என் தொகுதியில் மேம்படுத்தியது குற்றமா?

நான் தொகுதிக்கு நல்லது செய்ததுதான் தவறு என்றால், எதிர்கால சந்ததியினர் இந்த தவறை செய்யமாட்டார்கள் என்று ஆவேசமாக கூறினார்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சாம் பர்காஷ், பஞ்சாப் சட்டப்பேரவைக்கு 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
சம்ப்லாவை சமாதானப்படுத்தி ஒத்துழைப்பு கோருவேன் என ஷாம் பர்காஷ் கூறியுள்ளார்.

மேலும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரியை பஞ்சாபில் வேட்பாளராக அறிவித்துள்ளதற்கு மாநில பாஜகவும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

சண்டிகாரில் நடிகர் கிர்ரன் கேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தலைவர் சஞ்சய் டாண்டன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.