நெட்டிசன்:

தனுஷ் உட்பட திரைநட்சத்திரங்கள் பலரைப் பற்றி அதிர்ச்சியூட்டம் தகவல்களையும் படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்து வருகிறார் சுசித்ரா. இது குறித்து மூத்த திரைப்பத்திரிகையாளர் சரவணன் சவடமுத்து (Saravanan Savadamuthu) அவர்களது “பாடகி சுசித்ராவுக்கு மன நலம் பாதிப்பாம்..!” என்ற தலைப்பில்  எழுதியிருக்கும் முகநூல் பதிவு:

மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது சுசித்ராவும் ஒரு நாள் மாலையில் அங்கே வந்திருக்கிறார்.

வந்த வேகத்தில் “நானும் பேச வேண்டும். மைக் வேண்டும்…” என்று கேட்டிருக்கிறார். ஏற்பாட்டாளர்கள் தர மறுத்திருக்கிறார்கள். அங்கியிருந்த சினிமா பிரபலங்கள் அனைவரிடத்திலும் இதற்காக சண்டையிட்டிருக்கிறார் சுசித்ரா.

கொஞ்ச நேரம் கழித்து “எல்லாரும் பேசி முடித்த பின்பு பேசுங்கள்…” என்று சமாதானம் செய்திருக்கிறார்கள். இடையில் ஒவ்வொருத்தரும் பேசுவதற்கு எழும்போது அவர்களுக்கு முந்தி எழுந்து மைக்கை பிடுங்கி ரகளை செய்திருக்கிறார் சுசித்ரா.

ஒரு பிரபலமானவர் இப்படியெல்லாம் செய்வார் என்று அவர்களும் எதிர்பார்க்கவில்லை. கடைசியாக இவர் கையில் மைக் கொடுக்கப்பட பீட்டா அமைப்புக்கு ஆதரவாக பேசுவதுபோல சில வார்த்தைகளை பேசியிருக்கிறார்.

அவ்வளவுதான்.. ஒட்டு மொத்தக் கூட்டமும் எழுந்து அவரை நோக்கி வர.. மைக்கை பிடுங்கி அவரை இழுத்து வந்து ஓரமாக அமர வைத்திருக்கிறார்கள்.

“என்னை முழுதாக பேச விட்டால்தான் இங்கேயிருந்து போவேன்..” என்று கத்திக் கூப்பாடு போட்டு அங்கேயே உட்கார்ந்து கொண்டாராம்.

அதோடு சம்பந்தம், சம்பந்தமில்லாமல் என்னென்னவோ பேசியிருக்கிறார். பக்கத்தில் இருப்பவர்கள் இவர் என்னமோ மாதிரி பேசுகிறார் என்றே சொல்லியிருக்கிறார்கள்.

அங்கேயிருந்த ஒரு திரை பிரபலம் இவரை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்க.. முடியாது என்று மறுத்து தகராறு செய்திருக்கிறார். உடனேயே சுசியின் கணவர் கார்த்திக்கு போன் செய்து சொன்ன பின்புதான் சுசித்ரா சற்று மன நல பாதிப்பில் இருப்பதே தெரிந்ததாம்..!

கார்த்திக்கும் வர மறுத்துவிட்டாராம். “நான் வந்தா இன்னும் ரொம்ப கத்துவா.. நீங்களே எப்படியாச்சும் அவளை பத்திரமா அனுப்பி வைச்சிருங்களேன்…” என்றாராம்.

ஒரு வழியாக இரவு 11 மணிக்கு அவரது கார் இருக்கும் இடத்திற்கு அவரை கூட்டமாக சேர்ந்து நகர்த்திக் கொண்டு வந்துதான், காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்களாம்..!

சமீபமாக பாடல் வாய்ப்புகள் கிடைக்காதது.. பெரிய இசையமைப்பாளர்களின் உலக டூரில் இடம் கிடைக்காதது.. கணவர் கார்த்திக்குடன் சண்டை.. வருமானம் இல்லாதது.. என்று பல்வேறு பிரச்சினைகளால் டெப்ரஷன் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது கணவர் கார்த்திக் இப்போது சொல்கிறார்..!

பாவம் சுசித்ரா.. மன நோயாளியாக ஏதோ ஒரு கோபத்தில் இது அத்தனையையும் செய்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது. அவரது குடும்பத்தினர் அவர் மீது அக்கறை கொண்டு தகுந்த சிகிச்சையளித்தால் அவரை காப்பாற்றலாம்..!