டில்லி

ணிப்பூர் கலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக முத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணி ஆட்சி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் நடந்து வருகிறது.  மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு நாகா, குகி ஆகிய பழங்குடியின சமூகத்தினர்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு வன்முறை தொடர்ந்து வருகிறது.

இந்த இனக்கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இணையச் சேவையும் முடக்கப்பட்டது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விளையாட்டுத்துறை  அமைச்சகத்துக்கு மாற்றுங்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சுப்ரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில்,

 “பாஜக மணிப்பூர் அரசைப் பதவி நீக்கம் செய்து, அரசியலமைப்பின் 356ஆவது பிரிவின் கீழ் மத்திய ஆட்சியைத் திணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அமித்ஷாவை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்புங்கள். அவர் தனது மகனை பிசிசிஐயில் கவனித்துக் கொள்ள ஆர்வமாக உள்ளார்.

எனப் பதிவிட்டுள்ளார்.