சென்னை: தமிழகத்தில் அரியர் தேர்வு ரத்து அறிவிப்பு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரியர் தேர்வு தேதி அட்டவணையை தாக்கல் செய்யுங்கள் என  அனைத்து பல்கலைக்கழகங்களும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால்,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதோடு, விடுபட்ட 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து கட்டணம் கட்டிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில், தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை  விதிக்கப்பட்டதுடன், தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிக்கக்கூடாது என உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணை  புதிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மாணவர்கள் நலன் கருதியே முன்பு அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், தற்போதைய நிலையில் கொரோனா சூழல் மாறியுள்ளதால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வுகளை நடத்தப் பல்கலைக்கழகங்கள் முடிவு செய்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

அப்போது, அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியர் தேர்வு எப்போது நடைபெற உள்ளது என கேள்வி எழுப்பியதுடன்,   ஆன்லைன் அல்லது ஆஃ ப்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்துவது தொடர்பாக பிப்ரவரி 4ந்தேதிக்குள் தேர்வு  அட்டவணை தாக்கல் செய்யவேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.