டில்லி :
நேதாஜியின் பெயர் எந்த வகையான போர் குற்றவாளிகள் பட்டியலிலும் இடம் பெறவில்லை என்று அவர் தொடர்பாக வெளியான ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் தொடர்பாக நீண்டகாலமாக மர்மம் நீடித்து வருகிறது. அவர் கடந்த 1945-ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்ததாகவும், இந்தியாவில் மாறுவேடத்தில் அவர் வசித்து வந்ததாகவும்  சொல்லப்பட்டது.
அவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வந்த நிலையில்
கடந்த ஜனவரி 23ம் தேதி நேதாஜியின் பிறந்தநாளன்று அவர் தொடர்பான 100 ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டது.
download (3)
இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் 50 ஆவணங்கள்,  ஏப்ரல் மாதம் 25 ஆவணங்கள்  என்று மூன்று கட்டங்களாக 175 ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வந்த 1968 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நேதாஜி தொடர்பான மேலும் 25 ரகசிய ஆவணங்களை இணையதளத்தில் மத்திய அரசு  வெளியிட்டது.
இந்த ஆவணங்களில் 5 ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தாலும், 4 ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தாலும், 16 ஆவணங்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தாலும் பாதுகாக்கப்பட்டு வந்தவையாகும்.
இந்த ஆவணங்கள் மூலம் நேதாஜியின் பெயர் எந்த வகையான போர் குற்றவாளிகள் பட்டியலிலும் இடம்பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.