திருவனந்தபுரம்: வேலைநிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கூடாது என கேரள மாநில அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் அவ்வப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை மத்திய, மாநில அரசுகள் ஏற்காத பட்சத்தில் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு, மக்கள் பணிகளை ஸ்தம்பிக்க செய்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 மற்றும் 29-ந்தேதிகளில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்ககோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் அமர்வு விசாரித்து வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து,  அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது சட்ட விரோதமானது,  அரசு ஊழியர்கள் அவர்களின் நடத்தை விதிகள், அரசாங்க சுற்றிக்கைகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் அறிவிப்புகளை மீறி வேலை நிறுத்தம் செய்ய சட்ட ரீதியாக உரிமை இல்லை என்றும், இதனை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது என்றும் தெரிவித்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு, அரசு சம்பளம் வழங்கியதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் இது அவர்களை ஊக்குவிப்பது போல அமையும் என்றும், ஆகையால் இனி இதுபோன்ற விவகாரங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.