புனே: கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி தயாரித்து வழங்கி வந்த சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின்  10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி ஆகிவிட்டதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றை தடுப்பதில் தடுப்பூசி பெரும் பங்காற்றின என்பதை யாரும் மறந்துவிட முடியாது. தற்போத உலக நாடுகளில் கொரோனா தொற்று பெருவாரியாக குறைந்து விட்டதாகவும், இந்தியாவில் தொற்று பரவல் 2ஆயிரம் முதல் 3 ஆயிரத்துக்குள் குறைந்து விட்டதால்,   தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மக்கள் அக்கறை காட்டவில்லை. மேலும்,  பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதது காரணமாக பல கோடி டோஸ் தடுப்பூசிகள் காலாவதியாகி உள்ளன.

இந்த நிலையில்  புனேவில் நடைபெற்ற வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அமைப்பின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதர் பூனவலலா, நாங்கள் கடந்த டிசம்பர் முதலே கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்தி விட்டோம். அப்போது கையிருப்பில் இருந்த சுமார் 10 கோடி டோஸ்கள் காலாவதியாகி விட்டதால் வீணாகி விட்டது. பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் தற்போது மக்களிடையே ஆர்வம் இல்லை. இதனால் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தேவை இல்லை.

தற்போது, நாங்கள் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம் என்றவர்.  எங்களின் கோவாவேக்ஸ் தடுப்பூசி அதன் செயல் திறனுக்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பூஸ்டர் தடுப்பூசி அடுத்த 10-15 நாட்களில் ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.