புதுடெல்லி:

திர்காலத்தை பற்றி பேசிக்கொண்டு நிகழ்காலத்தை மறக்க கூடாது. விவசாயிகளுக்கு நேரடியாக பணம் பெறும் வகையில் செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லாரியில் சென்றபோது உ.பி., மாநிலம் ஆரையா பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக பிரதமர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்ததாவது:

கொரோனா ஊரடங்கால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்கள் அரசிடம் அதிகம் எதிர்பார்க்கின்றனர். ஏழை மக்களுக்கான நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மக்களுக்கு வழங்கும் நிதியை நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். மக்களுக்கு இப்போது பணம்தான் தேவை.

தேசிய ஊரக வேலை வழங்கும் திட்டத்தில் 200 நாளாக அதிகரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு நேரடியாக பணம் பெறும் வகையில் செய்ய வேண்டும். இவர்கள் நமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியவர்கள். எதிர்காலத்தை பற்றி பேசிக்கொண்டு நிகழ்காலத்தை மறக்க கூடாது. சமீபத்தில் நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் அவலத்தை பார்க்கும் போது எனது இதயம் கசிகிறது. உபி.யில் தொழிலாளர்கள் பலர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்.

இவர்களுக்கான நிவாரணம் , பராமரிப்பு போதாது. அவர்களுக்கு மேலும் உதவிகள் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நாம் உதவி செய்யா விட்டால் நாட்டின் பொருளாதாரம் எழ முடியாது. நான் இந்த விவகாரத்தை அரசியலாக பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.