சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை குறித்து கவர்னரை மாநில அரசு வற்புறுத்த முடியாது என்று அமைச்சர்  ஜெயக்குமார் கூறினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம், 7 பேர் விடுதலையில் கவர்னர் முடிவு குறித்த செய்திகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,

ராஜீவ் கொலை வழக்கில் ஜெயிலில் இருக்கும் 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. ஆனால் கவர்னர்தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக கவர்னர் இன்னும் அதிகாரப்பூர்வ மாக முடிவு எதையும் அறிவிக்கவில்லை. 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கவர்னரை அரசு வற்புறுத்த முடியாது என்றார்.

பிரதமர் மோடி தமிழ் மீது காதல் கொண்டவர். அதனால் தான் தமிழின் பெருமைகளை அறிந்து உலகம் முழுவதும் குறிப்பிட்டு வருகிறார். அதேபோல் மற்ற மத்திய மந்திரிகளும் தமிழின் பெருமையை உணர்ந்து இருக்கிறார்கள். எனவே தமிழுக்கு எந்த ஊறும் வராது.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க கூடாது. தமிழும், ஆங்கிலமும் என்ற இரு மொழிக்கொள்கையே உள்ளது. மற்ற மொழி எதுவேண்டுமானாலும் விருப்பத்தின் பேரில் கற்றுக்கொள்ளலாம். பொதுவாக கூட்டாச்சி தத்துவத்தின்படி மொழி திணிப்பு கூடாது. இந்தி திணிப்பால் 67-ல் நடந்த பிரச்சனைகள் மத்திய அரசுக்கும் தெரியும். எனவே இந்தியை திணிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

State government cannot persuade, governor to release 7 persons! says Jayakumar