சென்னை: மத்திய, மாநில அரசு சின்னங்கள் பயன்படுத்தும் விவரம் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் அரசு சின்னங்களை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம், அரசு சின்னங்கள் தவறாக பயன்படுத்துதல் தொடர்பாக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை அறிவுறுத்தியது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சரகள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அரசு சின்னங்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் தங்களின் வாகனம் லெட்டர் பேடு, விசிட்டிங் கார்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அரசு விதிகளின்படி, அரசு சின்னங்களை பயன்படுத்த தகுதி உள்ள முக்கிய நபர்கள், அதிகாரிகளை தவிர மற்றவர்கள் சின்னங்களை பயன்படுத்தக் கூடாது. சட்டங்கள் மீறப்படும்போது சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளவர்,  அரசு சின்னங்களை சாட்சி யங்கள் முன்னிலையில் பறிமுதல் செய்யவும், காணொளியாக பதிவு செய்யவும் காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.