சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

லைமுறைகடந்து ரசிகர்கள்களால், சொக்கவைக்கும் அழகுக்காக கொண்டாடப்படுபவர் நடிகை சில்க் ஸ்மிதா, அதேபோல சின்ன வயதில் இவ்வளவு அபரிதமான நடிப்பா என வியக்கவைத்தவர் நடிகை ஷோபா. இருவருமே தற்கொலை என்ற முடிவை தேடிக்கொண்டவர்கள். இளமையான முகம் மங்கி, சுருக்கம் விழுந்த வயோதிக முகம் வருவதை தவிர்த்துக்கொண்டவர்கள் என்பது ஒன்றே இவர்கள் வாழ்வில் லாபம்.

பட்டென்று போய்சேர்ந்த சில்க், ஷோபா போன்றோரை நினைக்கும்போதெல்லாம்,, சில முன்னணி நடிகைகள் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டு அலங்கோலமாய் செத்துப்போன வரலாற்றைவிட இவர்கள் சாவு எவ்வளவோ மேல் என்றே தோன்றும்.

1970களில் இந்தி திரையுலகில் டாப் ஸ்டாராய் ஜொலித்த நடிகை பர்வீன் பாபியும் அப்படித்தான். நட்சத்திரம் எரிந்து சாம்பலாகிப்போன கதை..

திரையுலக வழக்கப்படி, டீன் வயதுகளில் கதாநாயகி ஆகாமல் இருபத்தைந்தை நெருங்கும்போதுதான் திரைக்கு வந்து சேர்ந்தார் பர்வீன் பாபி.

50-களிலும் 60-களிலும் கிளாமர் விஷயத்தில் தட்டுத் தடுமாறிக்கொண்டிருந்தது இந்தி சினிமா. அப்போது நடை உடை பாவனைகளில் கிளாமர் வித் ஸ்டைல் என ஹாலிவுட் ரேஞ்சுக்கு கொண்டு போன நடிகைகள், ஜீனத் அமன், நீத்து சிங் மற்றும் பர்வீன் பாபி.

மனைவி ஜெயாவுக்கு அடுத்த அமிதாப்பச்சன் அதிகமாக ஜோடியாக சேர்த்துக்கொண்டது பர்வீன் பாபியைத்தான் மஜ்பூர், தீவார், அமர் அக்பர் ஆண்டனி, நமக் ஹலால், காலியா மஹான், காலா பத்தர், ஷான் என போகும் அந்த பட்டியல். எல்லா படங்களும் மெகா ஹிட்.

அதிலும் இந்தி திரையுலகின் மெகா பிளாக் பஸ்டரான தீவார் படம் அமிதாப்புக்கு மட்டுமல்ல, பர்வீனுக்கும் ஒரு மைல்கல். இன்னொரு ஹீரோயின் நீத்துசிங் குடன் கிளாமரில் போட்டிபோடவேண்டிய நிலையில், அற்புதமான நடிப்பாலும் கிளாப்சை அள்ளிக்கொண்டு போவார் பர்வீன்.

அதிலும் வில்லனால் சிதைக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் அமிதாப் ஓடிவருவார். அமிதாப் கரங்களில் அழுதபடியே பர்வீன் பாபி உயிரை விடும்போது தியேட்டரே நிசப்தமாகிவிடும். படத்தில் பர்வீன் பாபியை எந்த அளவுக்கு கதாநாயகன் நேசித்திருக்கிறான் என்பதை காட்டும் வகையில் காட்சிகள் ஓடும், பர்வீன் உயிர்போனதுமே வில்லன் இடத்தை தேடிப்போய் சராமாரியாக அனைவரையும் சுட்டுத்தள்ளுவார் அமிதாப்.

பர்வீனை கொன்ற வில்லனை அடித்து உதைத்து கடையில் குண்டுக்கட்டாக தூக்கி பல அடுக்குமாடியிலிருந்து வீசியே கொன்று விடுவார் அமிதாப்.. (தளபதி படத்தில் மம்முட்டியை கொன்ற வில்லன் கரிவரதனை ரஜினி உடனே வெறியோட தேடிப்போகும் சீன் இங்கிருந்து உருவப்பட்டதுதான்) அந்த அளவுக்கு தீவாரில் அமிதாப் -பர்வீன்பாபி அட்டாச்மெண்ட் கெமிஸ்ட்ரி கரைபுரளும்.

ஷான் படத்தில் அவர் தோன்றும் பியார் கர்னே வாலா பாட்டெல்லாம் ஒரு காலத்தில் தேசிய கீதம்போல இருந்தது.

அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உச்சத்தில் தகதகவென மின்னிய பர்வீன்பாபி, இயல்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு திடீரென மர்ம தேசத்து மகராணியாகிப்போனார்.

பட உலகைவிட்டு விலகினார், அமெரிக்கா போனார், வலம் வந்தார் ஏர்போர்ட்டில் உரிய ஆவணங்களை காட்டமுடியாமல் கண்டபடி உளறிக்கொட்டியதால் மனநோயாளியாக கருதப்பட்டு மருத்துவனைக்கு அனுப்பப்பட்டார்.

கடைசியில் இந்தியா அரசே நேரடியாக தலையிட்டு பர்வீன் பாபியை மீட்டுவந்தது. மறுபடியும், அமெரிக்க அதிபர் உட்பட உலகத்தலைவர்கள் தன்னைக்கொல்ல சதி செய்வதாக சொல்ல ஆரம்பித்தார். அமிதாப்பச்சனை, அண்டர்கிரவுண்ட் தாதா என்று குற்றம் சாட்டினார். எல்லாவற்றையும்விட நோய்வாய் பட்டு வீல்சேரே கதியானார்.

ரசிகர்களின் ஏக்கத்துக்குரிய செக்ஸி சிம்பிளாக திகழ்ந்த அவர், தனக்கான சொந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியாமல் தடுமாறினார். ஆறுதல் சொல்கிறேன் என நட்போடு வந்த சினிமா பிரலங்கள் சிலர், படுக்கையை பகிர்ந்துகொண்டபின் கை கழுவிவிட்டுப்போய்க் கொண்டே இருந்தார்கள். யாருமே வாழ்க்கையை தர முன்வரவில்லை

கடைசியில் மும்பை வீட்டில் கடந்த 2005 ஜனவரி 22ந்தேதி பிணமாக கண்டெடுக்கப்பட்டார் பர்வீன் பாபி. மூன்று நாட்களாக பால்பாக்கெட்டுகள், டெய்லி பேப்பர்கள் எடுக்கப்படவேயில்லை. வீடு மூடியே கிடைந்ததை பார்த்து சந்தேகப்பட்டு அக்கம்பக்கத்தினர் தகவல் காவல்துறைக்கு சொன்னார்கள்.

போலீசார் வந்து பார்த்தபோது, கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த பர்வீன் பாபி, வீல் சேரிலிருந்து விழுந்து கிடந்தார். உயிர் இல்லாமல் சடலமாய். அதுவும் அழுகிக்கொண்டிருந்த, சடலமாய்.

யார் பார்த்தாலும் கட்டி அணைத்துக்கொள்ள விரும்பிய உடல், கிட்டவே நெருங்கமுடியாத அளவுக்கு துர்நாற்றத்தை வீசிய கொடுமையை என்னவென்று சொல்வது. இந்தித்திரையுலகமே அதிர்ந்துபோனது.
மூன்று நாட்களாக, ஒருவருமே தொடர்பு கொள்ளாத நிலையில் பர்வீன் பாபி இருந்தாரா, அல்லது பர்வீன் பாபியிடம் தொடர்பே வைத்துக்கொள்ளாத வகையில் நட்பு மறந்த நிலையில் இந்தி திரையுலகம் இருந்ததா, இருதரப்புக்கே வெளிச்சம்..

ஜனவரி 22ந்தேதி கைப்பற்றப்பட்ட பர்வீன் பாபியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போதுதான் அவர் இரண்டு நாட்களுக்கு முன்பே அதாவது, ஜனவரி 20ந்தேதியே இறந்துவிட்டது தெரியவந்தது.

காதல் தோல்வி, மாபியா கேங் பிடியில் அடிமையாக சிக்கினார் என பர்வீன் பாபி வரலாற்றில் பல பக்கங்கள் செவி வழிச்செய்தியாகவே இருந்தன.

1940-களில் லேடி சூப்பர் ஸ்டராக விளங்கிய தங்கத் தாரகை நடிகை சுரையாவும் இப்படித்தான் கடைசியில் பரிதாபகரமான மரணத்தை சந்திக்க நேர்ந்தது..

பேரழகி மற்றும் அற்புதமான குரல்வளம் கொண்ட பின்னணி பாடகி என புகழோடு வலம் வந்தவர் சுரையா. இந்தி எவர்கீரின் ஹீரோ தேவ் ஆனந்த் வளர்ந்துவந்த நிலையில் அவர் மீது காதல் கொண்டவர். சுரையாவை தேவும் மனதார நேசித்தார். இந்த காதலுக்கு சுரையாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு. சினிமா பாணியிலேயே சுரையாவை மிரட்டினார்கள். காதல் தொடர்ந்தால் தேவ் ஆனந்ததை கொன்றே போட்டுவிடுவோம் என்று.

அதற்கு பயந்த சுரையாவிடம், பல முறை தைரியம் சொல்லி திருமணத்திற்கு வற்புறுத்தினார் தேவ் ஆனந்த். என்ன சொல்லியும் சுரையாவிற்கு தைரியம் வரவில்லை. கடைசியில் இப்படியும் ஒரு கோழைப்பெண்ணா, என ஓங்கி ஒரு அறையை சுரையாவின் கண்ணத்தில் விட்டுவிட்டு நடையை கட்டினார் தேவ் ஆனந்த். வாழ்க்கையில் அந்த வசந்த புள்ளியை தவறவிட்ட லேடி சூப்பர் சுரையா, தனிமையிலே வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும் ஒற்றை ஆளாய் மும்பையில் அவ்வளவு பெரிய பங்களாவில் வாழ்ந்தார். கடைசியில் அனாதையாகவே இறந்துபோனார். அவர் செத்துப்போய்விட்டதே தெரியாமல் இந்தி திரையுலகம் இயங்கிக்கொண்டிருந்தது. மும்பை பங்களாவில் சுரையாவின் சடலம் சில நாட்கள் கேட்பாரற்றே கிடந்தது. ..சராசரி ஆட்களுக்கு கிடைக்கும் கௌரவமான மரணம்கூட, சரித்திரம் பேசும் பிரபலங்களுக்கு சில நேரம் கிடைப்பதில்லை.. காலத்தின் கைகளில்தான் எத்தனை வகையான வண்ணக்கோலங்கள் மற்றும் அதற்கு எதிரான அலங்கோலங்கள்!!!