சுரேந்தர் சிங் - கொலை செய்தகாட்சி - ஆசிரியை கருணா
சுரேந்தர் சிங் –      கொலை செய்த காட்சி –     ஆசிரியை கருணா

டெல்லி:
ஒருதலைக்காதல் காரணமாக காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியையை பட்டப்பகலில் நடுரோட்டில் சரமாரியாக குத்தி படுகொலை செய்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
டெல்லியில் காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியை, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த கருணா என்ற பெண்ணை சுரேந்தர்சிங் என்ற நபர் ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
திருமணமாகி விவகாரத்து பெற்ற சுரேந்தர் சிங் பணியாற்றி வந்த கம்ப்யூட்டர் மையத்தில், பள்ளி ஆசிரியை கருணா, கடந்த ஓராண்டுக்கு முன் பயிற்சி பெற்றதாகவும், அப்போது முதலே சுரேந்தர் சிங், கருணாவை ஒருதலையாக காதலித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வழக்கம்போல் நேற்றும் ஆசிரியை கருணா  பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.  அவரை பின்தொடர்ந்த சுரேந்தர் சிங்  கத்தியால் கருணாவை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அந்த இளம் பெண்ணை காப்பாற்ற  யாரும் முன்வரவில்லை.
இதையடுத்து ஒரு சிலர் கருணாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் உடலில் 26 இடங்களில் கத்தி குத்து விழுந்துள்ளது. மருத்துவமனையில் கருணாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியிலே இதுபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதனிடையே, சம்பவ இடத்தில் இருந்து தப்பியோட முயன்ற சுரேந்தர் சிங்கை, அப்பகுதி மக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஒருதலைக் காதல் பிரச்னைக்கு இளம் பெண்கள் அடுத்தடுத்து பலியாகி வரும் கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக மகளிர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, டெல்லி காவல்துறை ஆணையரிடம் விசாரணை அறிக்கை கோரியுள்ளதாக தெரிவித்தார்.