திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 21-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சி விகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன் பின் ஆழ்வார் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்து திமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு ஒரு மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

8-ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார்.

பின்னர் அதிகாலை 4.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

தொடர்ந்து 20-ம் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.