டில்லி

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட காவலருக்கு மரியாதை செலுத்திய காவல்துறை சூப்பிரண்ட் காவலரின் மகனை கண்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் பகுதியின் காவல்துறை ஆய்வாளராக அர்ஷத் கான் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் முதல் மகனுக்கு 5 வயதும் இரண்டாம் மகனுக்கு இரண்டு வயதாகிறது. இந்த பகுதியில் உள்ள கேபி சாலை என்னும் இடத்தில் தீவிரவாதிகள் காவல் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 5 பேர் மரணம் அடைந்தனர்.   இதே தாக்குதலில் அர்ஷத் கான் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடல் நிலை மோசமானதை ஒட்டி அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அர்ஷத் கானுடன் சேர்ந்து தாக்குதலில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை ஆறானது.

அவருடைய உடலுக்கு காவல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ஸ்ரீநகர் காவல்துறை சூப்பிரண்ட் அதிகாரியான ஹசீப் முகல் மலர்வளையம் வைத்த பிறகு மறைந்த அர்ஷத் மகனை கையில் ஏந்தி கண்ணீர் சிந்திய அகாட்சி அங்கிருந்தோர் மனதை உருக்கியது.