கொழும்பு: இலங்கையை பொருளாதார சிக்கலில் சிக்க வைத்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல இலங்கை உச்சநீதிமன்றம் விதித்த தடை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையை சேர்ந்த சிலோன் வர்த்தக கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னே உள்ளிட்ட சிலர் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் ராஜபக்சேக்களக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.  அதில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே, மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவர்டு கப்ரால் ஆகியோர்தான் காரணம் என்றும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி இருந்தனர்.

இந்த வழக்கை ஜிலை  15-ந் தேதி  விசாரித்த இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, மேற்கண்ட 3 பேரும் நாட்டை விட்டு வெளியேற ஜூலை 28-ந் தேதிவரை தடை விதித்தது. பிறகு இத்தடை ஆகஸ்டு 2-ந் தேதிவரையும், 11-ந் தேதிவரையும் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பாது, மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 3 பேரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை செப்டம்பர் 5-ந் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டது