புதுக்கோட்டை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 6 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தத்க கூறி  6 மீனவர்களை  மீண்டும் சிறைபிடித்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் சில மீனவர்களை பிடித்து சிறையில் அடைத்த நிலையில் மீண்டும் சிறைபிடித்துள்ளது தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் முறையான ஆட்சி, அதிகாரம் இல்லாத நிலையிலும், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்,   புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதி பெற்று 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரையில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் காரைநகர் அருகே இந்திய எல்லை கடல் பகுதியில் வலைகளை விரித்து மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு  ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக்கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 மீனவர்களை கைது செய்தனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

இந்த விவகாரம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 4-ந்தேதி கடலுக்கு சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த  5 பேரையும் கைது செய்திருந்த நிலையில் , தற்போது மீண்டும் 6 பேரை கைது செய்துள்ளது மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய மீனவர்கள், இலங்கை கடற்படைக்கு ஒவ்வொரு நாளும் நாங்கள் பயந்து தொழில் செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் எங்களை அத்துமீறி கைது செய்கிறார்கள். இது வாடிக்கையான நிகழ்வாகி வருகிறது. னவே மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகையும் விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.