வாரணாசி

ன்று காலை 8 மணி முதல் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு தொடங்கி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி உள்ளது.  இந்த மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது.  இந்த அம்மனுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.   சிங்கார கவுரி அம்மனுக்கு, தினமும் பூஜை நடத்த அனுமதி கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிமன்றம் ஞானவாபி  மசூதியில் கள ஆய்வு நடத்த குழு அமைத்ததை எதிர்த்து மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி குழு சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து கள ஆய்வை 17-ம் தேதிக்குள் முடித்து அறிக்கை அளிக்க   உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இம்மனுவை நேற்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு பரிசீலித்தது.   தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில், “இன்னும் வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பார்க்காததால். இப்போது கள ஆய்வுக்குத் தடை விதிக்க முடியாது” என்று கூறினார்.  இருப்பினும் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இன்று மசூதியில் கள ஆய்வு தொடங்கியுள்ளது. ஆய்வுக் குழுவில் வழக்கறிஞர் ஆணையர் அஜய்குமார் மிஸ்ரா, சிறப்பு வழக்கறிஞர் விஷால் சிங், துணை வழக்கறிஞர் அஜய் பிரதாப் சிங், மனுதாரர்கள், அவர்களின் வழக்கறிஞர்கள் ஆகியோர் என மொத்தம் 36 பேர் கள ஆய்வுக்காக ஞானவாபி மசூதிக்கு வந்துள்ளனர்.  அசம்பாவிதங்களைத் தடுக்க மசூதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.