சென்னை

தாம்பரம் மற்றும் நாகர்கோவில் இடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

வரும் நவம்பர் 12 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இதையொட்டி சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும்.

அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  நவம்பர்.5,12,19,26 ஆகிய 4 நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06012) மறுநாள் அதிகாலை 4.10 மணிக்குத் தாம்பரம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு மார்க்கமாகத் தாம்பரம் – நாகர்கோவில் இடையே நவம்பர் 6,13,20,27 ஆகிய 4 நாட்களில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06011) அன்றைய தினம் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான டிக்கட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கப்பட்டுள்ளது.