மயபுரம் மாரியம்மன் கோவில்

மயபுரம் மாரியம்மன் கோவில் பற்றிய சிறப்புச் செய்திகள்

தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலையாயது சமயபுரம் மாரியம்மன் கோயில்.

இது, தமிழ் நாட்டின் முக்கிய நகரமும், முற்கால சோழ வளநாட்டின் தலைநகரமும் ஆன, திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  சமயபுரத்து மாரியம்மன், இங்கு, மக்களின் குறைகளைப் போக்கி வேண்டியவருக்கு வேண்டிய வரமளிக்கும், மகாசக்தியாக, ஆயி மகமாயி, அன்னை பராசக்தியாகக் கோயில் கொண்டிருக்கிறாள்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்குச் சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது.

மேலே குறிப்பிட்ட கால கட்டத்தில் வைணவி என்ற மாரியம்மன் விக்கிரகம் ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஐயர் சுவாமிகள், வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார்.   அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள். (அது தற்போதுள்ள இனாம் சமயபுரம்).

பிறகு அம்பாளின் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். (தற்போதுள்ள மாரியம்மன் கோவில் இருப்பிடம்).  அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அம்பாளின் விக்கிரகத்தை பார்த்து அதிசயப்பட்டார்கள்.   பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அம்பாளை வழிபட்டு அம்பாளுக்கு ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்று பெயரிட்டு வழிபட்டனர்.

இக்காலத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்போது கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது அரண்மனை மேட்டிலிருந்த கண்ணனூர் மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்குக் கோவில் கட்டி வழிபடுவதாகச் சபதம் செய்தார்கள். அதன்படியே அவர்கள் வெற்றியும் கண்டார்கள். அம்மனுக்குக் கோவிலையும் கட்டினார்கள்.

விஜயரெங்க சொக்கநாதர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்குத் தனிக்கோவில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில் இன்று, ‘சமயபுரம் மாரியம்மன்’ கோவிலாக மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

மக்களை இரட்சித்து, வேண்டிய வரங்களைக் கொடுத்து, காத்துவரும் அம்மனின் அழகு தெய்வீகமானது. அம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். அந்த அழகைக் கண்டால் மனம் உருகும், மனம் ஒருமைப்படும், மனத்திலுள்ள மாசும் அகலும்.

தாயைத்தேடி அலைந்தவர்க்கு, கருணையே வடிவாக அமர்ந்திருக்கும் தாய், ஆயி மகாமாயி காட்சி தருவாள்.  மாரியம்மனுக்கு நாடெங்கும் பக்தர்கள் உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.