சென்னை: மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்,  சட்டத்தமிழ் புதிய பாடத்திட்டம் உள்பட ஏராளமான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஜூன் 24ந்தேதி நடைபெற்ற சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களைத் தொடர்ந்து,  சட்டத்துறை மா அமைச்சர் ரகுபதி பல்வேறு  புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

1. திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிதாக அமைக்கப்படும்.

2.புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தற்போது இயங்கி வரும் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பிரித்து தனித்தனியாக ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றமும் அமைக்கப்படும்.

3. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான போதை மருந்துகள், மன மயக்க பொருட்கள் சட்டம், 1985ன் கீழ்பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கென திருநெல்வேலியில் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.

4. கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் ஒரு கூடுதல் குடும்பநல நீதிமன்றம் அமைக்கப்படும்.

5.மதுரை மாவட்டம் மதுரையில் ஒரு கூடுதல் குடும்பநல நீதிமன்றம் அமைக்கப்படும்.

6.சென்னை உயர்நீதிமன்ற முதன்மை ஆயம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் பயன்பாட்டிற்காக மின்கலத்தால் இயக்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்கள் தலா இரண்டு வீதம் 4 வாகனங்கள் ரூ.27.72 லட்சம் செலவில் வாங்கப்படும்.

7. திருச்சிராப்பள்ளியில் மாநில சீர்திருத்த நிருவாகப் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும்.

8. தஞ்சாவூர் மாவட்டத்தில் புதியதாக மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும்.

9. சிறைவாசிகள் தங்கள் குழந்தைகளை அருகில் சந்திக்க ஏதுவாக குழந்தை நேய நேர்காணல் அறைகள் 9 மத்திய சிறைகள், 9 பெண்கள் தனிச் சிறைகளில் அமைக்கப்படும்.

10. மத்திய சிறை 2 புழலில் கூடுதலாக 1000 சிறைவாசிகளை அனுமதிக்கும் வகையில் கூடுதல் தளம் கட்டப்படும்.

11.புழல் மத்திய சிறை வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பார்வையாளர் காத்திருப்புக்கூடம் கட்டப்படும்.

12. அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டத்தமிழ் எனும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

13. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகதில் புதிதாக இரண்டு முதுகலை சட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

14. மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

15. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகதில் மாணவர்களுக்கு விடுதிக் கட்டம் கட்டப்படும்.

இவ்வாறு கூறினார்.