சென்னை

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இன்று தமிழகத்தில்  சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

நாளை பக்ரீத் பண்டிகை நாளை (29-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளதையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த செய்திக்குறிப்பில்,

”இன்று சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே போக்குவரத்துக் கழகம் இதைக் கருத்தில் கொண்டு, கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்புப் பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து பெங்களூரு உள்ளிட்ட பிற முக்கிய இடங்களுக்கு 400 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணித்திடக் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் இதைப் பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”

என அறிவிக்கப்பட்டுள்ளது.