துரை

ரும் 15 ஆம் தேதி முதல் சபரிமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகின்ற 27 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்குப் பூஜையும் நடைபெற உள்ளது. மதுரை, திண்டுக்கல், பழனி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் சபரிமலைக்கு அதிகளவில் பக்தர்கள் செல்கின்றனர். 

பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் மதுரை, திண்டுக்கல், பழனி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து குமுளிக்குச் செல்ல வரும் 15 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் குமுளியில் இருந்து சபரிமலைக்கு செல்ல கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அதிக அளவில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

குறிப்பாக  மண்டல பூஜை நடைபெறும் 27 ஆம் தேதி சுமார் 100 பேருந்துகளும், மகர விளக்குப் பூஜைக்காக ஜனவரி 15 ஆம் தேதி தேவைக்கு ஏற்ப இன்னும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சபரிமலை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக மதுரை, திண்டுக்கல், பழனி, திருச்சி மற்றும் குமுளி ஆகிய பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு உதவவும், வழிகாட்டவும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் .

அரசு விரைவு போக்குவர்த்துக் கழகம் கொல்லம், மூணாறு, கொடைக்கானல், திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, சேலம், நாகர்கோவில், திருச்செந்தூர், நெய்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, மன்னார்குடி, வேலூர் மற்றும் நாகூர் ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக  முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

எனவே பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம், செல்போன் செயலி மற்றும் இ-சேவை மையம் மூலமாகப் பதிவு செய்துகொள்ளலாம்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.