பி.டி.எஸ். என்று இசை ரசிகர்களால் அறியப்படும் ‘பியாண்ட் தி சீன்’ (Beyond the Scene) எனும் ஏழு பேர் கொண்ட தென் கொரிய பாப் (K-Pop) இசை கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாளை நடைபெறுகிறது.

கொரோனா பரவலுக்குப் பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ‘பெர்மிஷன் டு டான்ஸ் ஆன் ஸ்டேஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஷோஃபி அரங்கத்தில் நவம்பர் 27 மற்றும் 28 மற்றும் டிசம்பர் 1 – 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நான்கு நிகழ்ச்சிகளையும் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

உலகெங்கும் ரசிகர்களை கொண்டிருக்கும் பி.டி.எஸ். குழுவின் நிகழ்ச்சியைக் காண தென் கொரியாவில் இருந்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ரசிகர்கள் படையெடுத்துள்ளனர்.

விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ரசிகர்கள்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து விதமான முன்னேற்பாடுகளுடன் அமெரிக்கா சென்று இறங்கியிருக்கிறார்கள்.

பல்வேறு காரணங்களால் அமெரிக்கா செல்ல முடியாத ரசிகர்கள், உள்ளூர் ஆட்டக்காரர்களாக இருந்த பி.டி.எஸ். இசையுலகில் தனி சாம்ராஜ்த்தை ஏற்படுத்தியுள்ளதால், மீண்டும் இவர்களின் நிகழ்ச்சி தென் கொரியாவில் எப்போது நடக்குமோ தெரியாது என்று புலம்பிவருகிறார்கள்.