ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டின் பேட்ஸ்மேனான குயின்டன் டி காக். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரெனஅறிவித்து உள்ளார். தற்போது 29 வயரே ஆன குயின்டன் டி காக் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது நடைபெற்று முதல் டெஸ்ட் போட்டியில்,  இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் கோட்டை என்று சொல்லப்படும் செஞ்சூரியன் மைதானத்தில் இங்திய அணி வெற்றிபெற்றுள்ளது பெருமையாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் மிக முக்கிய கிரிக்கெட் வீரரான குயிண்டன் டிகாக் திடீரென தனது ஓய்வை அறிவித்துள்ளார். டிகாக் ஏற்கனவே  இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளில் இருந்து முதலில் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள டிகாக்,  ஓய்வு முடிவை நான் எளிதாக எடுத்துவிடவில்லை. நீண்ட காலமாக யோசித்து, எதிர்காலத்தை மனதில் வைத்துதான் முடிவெடுத்தேன். எனக்கு முதலில் எனது குடும்பம் தான் முக்கியம். மனைவி ஷாஷா மற்றும் விரைவில் பிறக்கவிருக்கும் குழந்தைக்காகவும் இனி வரும் நாட்களை செலவிட நினைக்கிறேன். குடும்பத்தினருக்காக  நேரங்களை ஒதுக்கவும், மகிழ்ச்சியாக வாழவும் இருக்க இந்த ஓய்வு முடிவை அறிவித்துள்ளேன்.

தொடர்ந்து, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவேன். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான குயின்டன் டிகாக், இதுவரை 54 போட்டிகளில் ஆடி 3,300 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 செஞ்சுரியும்  அடங்கும். இளம் வயதிலேயே ஓய்வை அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர் குயிண்டன் டிகாக்.