டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த 3 மாதங்களுக்குள் 2வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது காங்கிரசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும், தினசரி பாதிப்பு 15ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை தொடர்கிறது. தலைநகர் டெல்லியில் தொற்று பரவல் அதிகம் காணப்படுகிறது. இதனால், பொதுஇடங்களில் முக்கவசம் கட்டாயம் என மாநில அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியாகாந்திக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் உறுதிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பான அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமதி சோனியா காந்திக்கு இன்று கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சோனியா காந்த3 மாதங்களுக்குள்  தற்போது மீண்டும் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.